பாண்டியா தென்னாப்பிரிக்காவை மிரட்டி விட்டார்..! முன்னாள் ஜாம்பவான் புகழாரம்
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உருவாகி வருகிறார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான லேன்ஸ் குளூசனர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியில், வேகப்பந்து, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் அசத்தும் வகையிலான ஆல்ரவுண்டர் கிடைக்காமல் இந்திய அணி நீண்டகாலமாக தவித்து வந்தது. உலகக் கோப்பையை இந்திய அணிக்கு முதன்முறையாக வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு பிறகாக அப்படியொடு ஆல்ரவுண்டர் கிடைக்காமல் இருந்தார்.
தற்போது ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். பேட்டிங், வேகப்பந்து, பீல்டிங் என அனைத்திலும் அசத்தி வருகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. அந்த இக்கட்டான நிலையிலிருந்து இந்திய அணியை மீட்டெடுத்தவர் ஹர்திக் பாண்டியா. சிறப்பான, நிதானமான மற்றும் அதிரடியான ஆட்டத்தால், 95 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். மேலும் பவுலிங்கிலும் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை, இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் என குளூசனர் புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள குளூசனர், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் சொத்தாக உருவாகி வருகிறார். தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாண்டியாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவரது ஆட்டத் திறமையின் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தார். பாண்டியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறார். பந்துவீச்சையும் மேலும் மேம்படுத்தி கொண்டால், நிச்சயம் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாவார் என குளூசனர் புகழ்ந்தார்.