jadeja did not celebrate kohli wicket

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா, அதை கொண்டாடாமல், தடுமாறினார். அதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து பவுலிங்கில் சொதப்பிவரும் சென்னை பவுலர்கள், நேற்று சிறப்பாக வீசினர்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜடேஜா வீசிய முதல் பந்திலேயே கோலி கிளீன் போல்டாகி வெளியேறினார். பெங்களூரு அணியின் மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அணியில் மற்ற வீரர்கள் கொண்டாட ரவிந்திர ஜடேஜா மட்டும் விராட் கோலியைப் பார்த்துக்கொண்டே தலையில் கைவைத்தபடி அமைதியாக சென்றார். விராட் கோலியோ இறுகிய முகத்துடன் வெளியேறினார்.

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு கொண்டாடாத ஜடேஜாவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

கோலியை அவுட்டாக்கிவிட்டு கொண்டாடினால், எதிர்காலத்தில் ஜடேஜாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது. அதனால்தான் கொண்டாடாமல் இருந்திருப்பார் என சிலர் விமர்சித்துள்ளனர்.

மேலும் சிலர் விராட் கோலிக்கு ஜடேஜா கடிதம் எழுதுவதுபோல் விமர்சித்துள்ளனர். அதில் ”விராட், எனக்கு உங்களை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை. மன்னித்துவிடுங்கள், அணியில் இருந்து நீக்கிவிடாதீர்கள் என்று ஜடேஜா, கோலியிடம் கோருவதாக விமர்சித்துள்ளனர்.

இவ்வாறு நெட்டிசன்கள் ஜடேஜாவை விமர்சித்துவருகின்றனர்.

பெங்களூரு அணியின் பேட்டிங் முடிந்து பேசிய ஜடேஜாவிடம் இதுதொடர்பாக வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜடேஜா, நான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் கொண்டாடும் மனநிலையிலும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.