இந்த செஸ் வீரருக்கு மீண்டும் உலக சாம்பியனாகி இருப்பது அற்புதமாக இருக்கிறதாம். யாருக்கு?
மீண்டும் உலக சாம்பியனாக இருப்பது அற்புதமான உணர்வாக இருக்கிறது என்று உலக ரேப்பிட் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
சௌதி அரேபியாவில் உலக ரேப்பிட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விளாதிமீர் ஃபெடோசீவை வென்று சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த். டை பிரேக்கர் வரை சென்ற இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் போட்டி குறித்து அவர் நேற்று, "இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் நம்பிக்கையற்ற நிலையிலேயே பங்கெடுத்தேன். எனினும், நன்றாக விளையாடி பட்டம் வெல்லும் அளவு முன்னேறியது எனக்கே ஆச்சர்யமளிக்கிறது. ஏனெனில், கடந்த இரு ரேப்பிட் செஸ் போட்டிகளில் மோசமாக விளையாடியிருந்தேன்.
இந்த நிலையில், இந்த ரேப்பிட் செஸ் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இருந்தே நான் முன்னேறுவதாக உணர்ந்தேன். உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தியது, ஆட்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். ஏனெனில், அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார்.
இறுதி ஆட்டத்தில் முதல் மூன்று சுற்றுகள் சமனில் முடிந்தன. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டம் திருப்பங்களுடன் அமைந்ததால், பட்டம் வெல்ல முடியாது என நினைத்தேன். ஆனால், டை பிரேக்கருக்கு சென்றதை அடுத்து, ஆட்டம் எனக்கு சாதகமாக மாறியதை உணர்ந்தேன். மீண்டும் உலக சாம்பியனாக இருப்பது அற்புதமான உணர்வாக இருக்கிறது" என்று விஸ்வநாதன் கூறினார்.