ISSF World Cup Winning Indian Coal Gold in Shotgun
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை இறுதிச்சுற்றின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து இணை 483.4 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.
இது, சர்வதேச துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணி பிரிவில் ஜிது ராய் - ஹீனா சித்து இணை வெல்லும் 3-வது தங்கமாகும்.
இதே பிரிவில், பிரான்சின் கோபர்வில்லெ - ஃபோகெட் இணை 481.1 புள்ளிகளுடன் வெள்ளி வென்றனர். சீனாவின் சாய் - யாங் இணை 418.2 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.
இப்போட்டியில் வரும் நாள்களில் 10 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் ஜிது ராய் கலந்து கொள்கிறார்.
2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணி பிரிவு முதல் முறையாக சேர்க்கப்படவுள்ளது.
இந்த நிலையில், சோதனை முயற்சியாக உலக கோப்பை போட்டிகளில் அந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை இறுதிச்சுற்றுப் போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட 'கலப்பு அணி' பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
