8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் கொச்சியில் ஞாயிற்றுக் கிழமை இரவு அரங்கேறிய 9–வது லீக்கில் கேரளா பிளாஸ்டர்சும், டெல்லி டைனமோசும் மோதின. இரு அணிக்கும் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் கோலாக்க தவறின. கடைசி நிமிடம் வரை இதே நிலை நீடித்ததால் திரண்டு இருந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

அதே சமயம் அவ்வப்போது முரட்டு ஆட்டம் தலைதூக்கியது. குறிப்பாக 83–வது நிமிடத்தில் டெல்லி வீரர் புருனே பெலிசரி பந்தை உதைக்க முயற்சித்த போது, அது கேரளாவின் எலாட்ஜி நோயே மீது பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எலாட்ஜி நோயே அவரை அடிப்பது போல் எகிறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்களும், நடுவரும் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.

முடிவில் இந்த சீசனில் கோல் இன்றி (0–0) டிரா ஆன முதல் ஆட்டமாக இது அமைந்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி – அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.