பிரிட்டன் பெண்களை துரத்தி அடித்த மித்தாலி ராஜ் டீம்…. ஒன்டே கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி அசத்தல் வெற்றி….
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த இரு அணிகளும் மோதிய கடைசி ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் ’டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, எமி ஜோன்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 94 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து பெண்கள் அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய பெண்கள் அணிக்கு ரோட்ரிக்ஸ் (2) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் மந்தனா (53) அரைசதம் அடித்து காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
அடுத்து வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி (7) நீண்டே நேரம் தாக்குபிடிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் மிதாலி, தீப்தி சர்மா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இதையடுத்து இந்திய பெண்கள் அணி, 45.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. மிதாலி 74 ரன்களும் தீப்தி 54 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்நிலையில் இந்திய பெண்கள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்று சாதித்தது.