இந்தியன் சூப்பர் லீக் சீசன் – 4 நவம்பரில் தொடங்குகிறது; முதல் ஆட்டத்தில் மோதுவது யார் தெரியுமா?
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சீசன் – 4 கால்பந்து போட்டி வரும் நவம்பர் 17-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
இந்தியன் சூப்பர் லீக் சீசன் – 4 கால்பந்து போட்டி வரும் நவம்பர் 17-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தாவும், கடந்த முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த சீசனில் பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய இரு புதிய அணிகள் களமிறங்குகின்றன. இதனால் ஐஎஸ்எல் போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளன.
இந்த சீசனில் 90 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 95 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மார்ச் 18-ஆம் தேதி நிறைவடைகின்றன. அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்.
இந்த சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் ரூ.132.75 கோடிக்கு 77 சர்வதேச வீரர்களையும், 166 உள்ளூர் வீரர்களையும் வாங்கியுள்ளன.
கடந்த சீசன் வரை ஒவ்வொரு அணியிலும் ஆடும் லெவனில் 6 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம் என்ற விதிமுறை இருந்தது. அது இப்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த சீசன் முதல் 5 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.