இந்தூரில் நடைபெற்று வரும் நியூஸிலாந்துக்கு எதிரன 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்து, முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, 2-ம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. 276 ரன்கள் முன்னிலையுடன் 4-ம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து 475 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், அந்த அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 இன்னிங்சில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த தொடரைக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை அடைந்துள்ளது. இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
