ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில், 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

6 நாடுகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வந்தன. இதில் இந்திய அணி பங்கேற்ற 6 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் பிஸ்மா மரூஃப் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.