புஜாரா, ரஹானே அபாரம்.. சொதப்பிய ஹிட்மேன்!! வலுவான நிலையில் இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி ஆடிவருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி ஆடிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்திருந்தது. புஜாராவும் ரஹானேவும் களத்தில் இருந்தனர். நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்தனர். வேகப்பந்து வீச்சை இருவரும் தெளிவாக ஆடினாலும் நாதன் லயன் ஸ்பின்னில் திணறினர். லயனின் ஸ்பின்னை சமாளித்து ஆடிவந்தனர். எனினும் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த புஜாராவை 71 ரன்களில் வெளியேற்றினார் லயன்.
அதன்பிறகு களத்திற்கு வந்த ரோஹித் சர்மா வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். இதற்கிடையே அரைசதம் கடந்த ரஹானேவுடன் ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே அடித்து ஆடினார் ரிஷப் பண்ட். நான்காம் நாளான இன்றைய உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்ததும் அதிரடியை தொடர்ந்தார் ரிஷப் பண்ட். நாதன் லயனின் ஒரு ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் விளாசி மிரட்டினார். எனினும் அதற்கு அடுத்த லயனின் ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து பண்ட் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானேவுடன் அஷ்வின் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்திய அணி 300 ரன்களை நெருங்கிவிட்டது.