இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆறு ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் டர்பன் நகரில் இன்றுத் தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றாத இந்தியா, சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என இழந்தது. அத்துடன், 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவதுமாக அதிகளவிலான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது இந்தியா.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்கள் உலகக் கோப்பை போட்டிக்கான வீரர்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும்.
கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 21 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
எனினும், கடந்த 2016 ஜனவரிக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுமாக அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியே காணாதது அணிக்கான பலம்.
அணியைப் பொருத்த வரையில், இலங்கை தொடருக்குப் பிறகு கேப்டன் கோலி அணிக்குத் திரும்புவதால் மிடில் ஆர்டரில் ஒரு இடத்துக்கான போட்டி உள்ளது.
அதில் ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே ஆகியோரில் ஒருவர் இடம்பெறலாம். ஆட்டம் நடைபெறும் நாளில் மழைக்கான வாய்ப்பு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரை இந்தியா களமிறக்க விளையும் பட்சத்தில் குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாயப்பளிக்கப்படலாம்.
தென் ஆப்பிரிக்க அணியில், கடைசி டெஸ்டில் கை விரலில் காயமடைந்த டி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்காதது அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்.
இந்த நிலையில் வழக்கமாக களம் காணும் ஃபர்ஹான் பெஹார்டியனுக்கு பதிலாக, முதல் முறைவீரர் காயேலிலே ஸான்டோ ஆட வாய்ப்பு உண்டு.