ஐபிஎல் 2018: ஒரேயொரு அந்நிய கேப்டன்.. ஹைதராபாத் அணிக்கு கேப்டன் நியமனம்.. தவான் நிராகரிப்பு
இந்த ஐபிஎல் சீசனுக்கு ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. தோனி தலைமையில் சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் நெருங்கிய நிலையில், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிக்கு புதிய சவால் உருவானது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
இதையடுத்து அவர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவானது. இவர்களுக்கு தடை விதிக்கும் முன்னரே ஸ்மித்தை நீக்கிவிட்டு ரஹானேவை கேப்டனாக நியமித்தது ராஜஸ்தான் அணி. ஆனால் ஹைதராபாத் அணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.
அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஹைதராபாத் அணியின் கேப்டனாக தவான் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்டால், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஹைதராபாத் அணி தவானை நியமிக்கவில்லை. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்துள்ளது. தவானுக்கு கேப்டன்சி அனுபவம் இல்லாததால், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.