ஹாக்கி போட்டியில் இந்தியாவை இரண்டாவது முறையாக வீழ்த்தியது பெல்ஜியம்...
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டியின் 2-வது பகுதி இறுதி ஆட்டத்தில் இந்தியாவை இரண்டாவது முறையாக பெல்ஜியம் வீழ்த்தியது.
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நியூஸிலாந்தில் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது.
இதன் 2-வது பகுதி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கான முதல் கோலை 29-வது நிமிடத்தில் மன்தீப் சிங் உதவியுடன் ரமன்தீப் சிங் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய பெல்ஜியம் 41-வது நிமிடத்தில் முதல் கோல் கண்டது. அந்த அணிக்கான பெனால்டி கார்னர் வாய்ப்பில் டேன்கை கோசைன்ஸ் மிகச் சரியாக கோலடித்தார்.
அதற்கு பதிலடியாக 42-வது நிமிடத்தில் நீலகண்ட சர்மா ஒரு கோலடிக்க, விடாப்பிடியாக விளையாடிய ஜெர்மனியில் செட்ரிக் சார்லியர் அடுத்த நிமிடத்திலேயே ரிவர்ஸ் ஷாட் முறையில் கோலடித்தார்.
ஆட்டத்தின் கடைசி 15 நிமிடத்தில் மொத்தம் 4 கோல்கள் விழுந்தன. இந்தியாவில் மன்தீப் சிங் 49-வது நிமிடம், ரமன்தீப் சிங் 53-வது நிமிடம் ஆகியோரும், பெல்ஜியத்தின் அமௌரி கெஸ்டர்ஸ் 51-வது, ஃபெலிக்ஸ் டெனாயர் 56-வது நிமிடம் ஆகியோர் ஸ்கோர் செய்தனர்.
இதனால் ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இறுதியில் ஷூட் அவுட் முறையில் இந்தியா ஒரு கோல் கூட அடிக்க இயலாமல் போக, பெல்ஜியத்தின் ஃபெலிக்ஸ் டெனாயர், செபாஸ்டியன் டாக்கீர், ஆர்தர் வான் டோரன் ஆகியோர் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்தத் தொடரின் முதல் பகுதி இறுதி ஆட்டத்திலும் பெல்ஜியம் இந்தியாவை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.