Here are the teams that have won the national level basketball tournament ...
தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியன் இரயில்வே அணியும், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும், செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே அணியும் வெற்றியைத் தழுவின.
கோவை மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் 52-ஆவது ஆடவர் நாச்சிமுத்து கௌண்டர் நினைவுக் கோப்பை, 16-ஆவது மகளிர் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் 26-ஆம் தேதி தொடங்கின.
இதில், மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், இந்தியன் இரயில்வே அணியும், இந்திய கடற்படை அணியும் மோதியதில் 71-64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் இரயில்வே அணி வென்றது.
அதேபோன்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதிய ஆட்டத்தில் 89-55 என இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அணி வென்றது.
மற்றொரு ஆட்டத்தில், சென்னை வருமான வரித் துறை அணியும், சி.ஆர்.பி.எஃப். அணியும் மோதின. இதில், 77-61 என்ற கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணி வென்றது.
மகளிர் பிரிவு ஆட்டத்தில், கேரள மின் வாரிய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் குவாஹாட்டி - வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) இரயில்வே அணியை வீழ்த்தியது.
அதேபோன்று செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே அணி 74-60 என்ற கணக்கில் கோவை மாவட்ட அணியை துவம்சம் செய்தது.
