கோலியின் கேப்டன்சியில் இதுதான் முதன்முறை!!
கோலி கேப்டனான நான்காண்டு காலத்தில் முதன்முறையாக அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணி களமிறங்கியுள்ளது.
கோலி கேப்டனான நான்காண்டு காலத்தில் முதன்முறையாக அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணி களமிறங்கியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கடந்த 2014ம் ஆண்டு கோலி பொறுப்பேற்றார். அதன்பிறகு விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில்(இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் வரை) ஆடி 22 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்த 38 போட்டிகளில் ஒருமுறை கூட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதில்லை. 38 போட்டிகளுக்கு அணி வீரர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு போட்டியில் ஆடிய அணி, அடுத்த போட்டியில் ஆடியதில்லை. ஒரு போட்டி முடிந்து அடுத்த போட்டியில் ஆடும் அணியில் குறைந்தது ஒரு மாற்றத்தையாவது செய்துவிடுவார் கோலி.
அதுதான் இதுவரை தொடர்ந்து வந்தது. கோலியின் இந்த செயலுக்கு முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அதே வீரர்களுடன் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மொயின் அலி, சாம் கரணை தவிர மற்ற எந்த வீரரும் சரியாக ஆடவில்லை. ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, அஷ்வின் ஆகியோரின் அசத்தலான பவுலிங்கில் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அதே அணி களமிறங்கியுள்ளது. கோலியின் கேப்டன்சியில் அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே வீரர்கள் களமிறங்குவது இதுதான் முதல் முறை.
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய வீரர்கள்:
ஷிகர் தவான், ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா