fine for indian captain virat kohli
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட விராட் கோலிக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்துவருகிறது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களும் இந்தியா 307 ரன்களும் எடுத்தன. நான்காவது நாள் ஆட்டம் இன்று நடந்துவருகிறது. மூன்றாவது நாளான நேற்று தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மழை வந்தது. மழை நின்ற பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் மைதானத்திற்கு வந்தபோது, மைதானம் ஈரப்பதமாக இருந்ததை கண்ட கேப்டன் விராட் கோலி, கோபமடைந்தார். ஆக்ரோஷமாக பந்தை மைதானத்தில் வீசி எறிந்ததோடு, இதுதொடர்பாக போட்டி நடுவரிடம் முறையிட்டார்.
ஐசிசி விதிப்படி இதுபோன்று ஆக்ரோஷமாக நடந்துகொள்ள கூடாது. அதனால் ஐசிசி விதிகளை மீறி ஆக்ரோஷமாக செயல்பட்ட விராட் கோலிக்கு சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அபராத புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.
