dinesh karthik spoken about advantages of wicket keeper captains
விக்கெட் கீப்பர், கேப்டனாக செயல்படுவதில் உள்ள சாதகங்கள் குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி அசத்தி வருகிறார். தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை 9 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் உத்வேகத்தில் உள்ளது.
இதற்கிடையே ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்கிடம், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பர்கள், கேப்டன்களாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தோனி, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் ஐபிஎல்லில் சிறந்த கேப்டன்களாக விளங்கியுள்ளனர். அந்த வகையில், விக்கெட் கீப்பர்கள் கேப்டன்களாக செயல்படுவதில் உள்ள சாதகங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராக இருக்கும்போது, ஃபீல்டிங்கை தெளிவாக அமைக்க இயலும். பேட்ஸ்மேன் எப்படி அடிப்பார் என்பதற்கு ஏற்றவாறு ஃபீல்டிங் செட் செய்ய முடியும். முழு மைதானத்தின் மீதும் தெளிவான பார்வை வைக்க இயலும் என்பதால், அது ஃபீல்டிங் அமைப்பதற்கு சாதகமாக அமையும் என பதிலளித்தார்.
