என்கிட்ட அந்த திறமை இருக்கு.. ஆனால் என்னை யாருமே பயன்படுத்தல!! மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்
டாப் ஆர்டரில் பேட் செய்து சதமடிப்பதை விட சிறந்த ஃபினிஷராக இருக்கவே விரும்புவதாக கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில், கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டுவருகிறார். இதுவரை நடந்த 10 ஐபிஎல் சீசன்களில் 6 அணிகளுக்காக ஆடியுள்ள தினேஷ் கார்த்திக், ஒரு சதம் கூட அடித்ததில்லை.
ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்கிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், சதமடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து வீரர்களுக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் சதமடிக்க வேண்டுமென்றால், முதல் மூன்று இடங்களில் பேட் செய்ய வேண்டும். நான் விளையாடிய பெரும்பாலான அணிகளில் என்னை டாப் 3 இடங்களில் களமிறக்க யாரும் விரும்பவில்லை. என்னை ஃபினிஷராகத்தான் பார்த்தார்கள்.
அனைத்து வீரர்களையும் போலவே எனக்கும் சதமடிக்க ஆசைதான். சதமடிப்பதற்கான திறமையும் என்னிடம் உள்ளது. ஆனால் சதமடிப்பதை விட முக்கியமானது, நான் போட்டிகளை வென்று கொடுக்கிறேன் என்பதே. அந்தவகையில், சதமடிப்பதை விட சிறந்த ஃபினிஷராக இருக்கவே விரும்புகிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.