எல்லாத்துக்கும் காரணம் தோனியும் கோலியும் தான்..! வெளிவந்த உண்மை
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. எப்போதும் ஏ, பி, சி என மூன்று நிலைகளில் வீரர்கள் தரம்பிரிக்கப்படுவர். ஆனால் இந்தமுறை “ஏ+” என்ற கிரேடு உருவாக்கப்பட்டு, அதில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் இந்த 5 வீரர்களும் ஆடுவதால், அவர்கள் ஏ+ கிரேடில் உள்ளனர்.
இந்த நான்கு கிரேடுகளின் கீழ் 26 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தோனி ஏ கிரேடில் உள்ளார். டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெற்றுள்ள அஸ்வின், ஜடேஜா, புஜாரா ஆகிய வீரர்களும் ஏ கிரேடில் உள்ளனர். இவர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம்.
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் வீரர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் வகையில், தனி கிரேடு உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை தோனியும் கோலியும் வழங்கினார்கள் என்று கூறப்பட்டது. அதை தற்போது சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள வினோத் ராய், ஏ+ கிரேடை உருவாக்கும் திட்டத்தையும் தோனியும் கோலியும் தான் முன்மொழிந்தார்கள். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் என்பதைக் காட்டுவதற்காகவே அவர்களின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏ+ கிரேடு உருவாக்கப்பட்டதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார்.