உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் கொச்சியில் மத்திய அமைச்சர் ஆய்வு…
உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்றான கொச்சியில், போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல்.
கேரள மாநிலம் கொச்சியில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவிருக்கும் ஜவாஹர்லால் நேரு மைதானம் மற்றும் பயிற்சி மைதானங்களில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் நேற்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
அந்த ஆய்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது:
“17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளாக நிறைவடைந்திருக்க வேண்டும்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்து வரும் தாமதம் அதிருப்தி அளிக்கிறது.
மே 15-ஆம் தேதிக்குப் பிறகு ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நான் கால்பந்து விளையாடப் போவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளேன். போட்டி ஏற்பாடுகளின் தாமதம் காரணமாகவே இங்கு வந்துள்ளேன். இதன்மூலம், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டுத் துறை அமைச்சகம் எவ்வளவு தீவிரமானதாகக் கருதுகிறது என்று எச்சரித்துள்ளேன்.
இத்தகைய சர்வதேச போட்டிக்கு உலகத் தரத்திலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். எனவே, இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளில் நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறேன்.
ஜவாஹர்லால் நேரு மைதானம் மற்றும் பயிற்சி மைதானத்தின் பணிகள் யாவும் மே 15-ஆம் தேதிக்குள்ளாக நிறைவு செய்யப்பட வேண்டும். ஒரு சில பணிகளுக்கு அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளின் தாமதம் காரணமாக போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டியதில்லை.
மே 15-ஆம் தேதிக்குள்ளாக பணிகள் நிறைவடையும்” என்று விஜய் கோயல் கூறினார்.