சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா 20-வது முறையாகவும், ஆன்டி முர்ரே 40-வது முறையாகவும் பட்டம் வெல்கின்றனர்.

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவும் (போலந்து), ஜோஹன்னா கோன்டாவும் (இங்கிலாந்து) மோதினர். அபாரமாக ஆடிய அனுபவம் வாய்ந்த ராட்வன்ஸ்கா 6–4, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பட்டத்தை தனதாக்கினார்.
தரவரிசையில் 3–வது இடம் வகிப்பவரான ராட்வன்ஸ்கா சீன ஓபன் பட்டத்தை வெல்வது 2–வது முறையாகும். ஏற்கனவே 2011–ம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியிருக்கிறார். மொத்தத்தில் இது அவரது 20–வது பட்டமாகும்.
இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6–4, 7–6 (2) என்ற நேர் செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை (பல்கோரியா) தோற்கடித்து கோப்பையை வென்றார். இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்காத முர்ரேவுக்கு இது 40–வது சர்வதேச மகுடம் ஆகும்.
