செஸ் ஒலிம்பியாட்: 6 சுற்றுகளின் முடிவில் தரவரிசை.. இந்திய அணிகளின் நிலை..! இன்று (ஆகஸ்ட் 4) வீரர்களுக்கு ஓய்வு
செஸ் ஒலிம்பியாட் 6 சுற்றுகளின் முடிவில் இந்திய ஆடவர் பி அணி ஓபன் பிரிவில் 3ம் இடத்தையும், மகளிர் பிரிவில் இந்திய மகளிர் ஏ அணி முதலிடத்தையும் பிடித்துள்ளன.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. செஸ் ஒலிம்பியாடை நடத்தும் இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் 3 அணிகள் மற்றும் மகளிர் பிரிவில் 3 அணிகள் என மொத்தம் 6 அணிகள் ஆடிவருகின்றன.
கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி நேற்று(ஆகஸ்ட் 3) வரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இந்த 6 சுற்றுகளிலும் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்று அசத்தினார். தமிழகத்தை சேர்ந்த நந்திதாவும் சிறப்பாக விளையாடிவருகிறார்.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளின் 6வது சுற்று போட்டி முடிவுகள்..!
இந்திய வீரர்கள் நாராயணன், அபிமன்யூ, அதிபன் ஆகியோரும் அபாரமாக விளையாடிவருகின்றனர். செஸ் ஒலிம்பியாடில் ஆடிவரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு இன்று ஒருநாள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 7வது சுற்று நாளை(ஆகஸ்ட் 5ம் தேதி) நடக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் என்பதால், ஆகஸ்ட் 9ம் தேதியுடன் 11 சுற்றுகள் முடிவடைகின்றன.
6 சுற்றுகளின் முடிவில் தரவரிசையை பார்ப்போம். இந்தியா ஆடவர் பி மற்றும் மகளிர் ஏ ஆகிய 2 அணிகள் மட்டுமே டாப் 5 இடங்களில் உள்ளன.
ஆடவர் தரவரிசையில் ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அர்மேனியா அணி முதலிடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் அமெரிக்க அணி 2ம் இடத்திலும், 5 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்த இந்தியா பி அணி 3ம் இடத்திலும் உள்ளன. உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஃப்ரான்ஸ் அணிகள் முறையே 4 மற்றும் 5ம் இடங்களில் உள்ளன.
இதையும் படிங்க - கையில் வாழைப்பழத்துடன் செஸ் போட்டிக்கு வரும் பிரக்ஞானந்தா.. என்ன காரணம் தெரியுமா? ரகசியத்தை கூறும் பெற்றோர்.!
மகளிர் பிரிவில் ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா ஏ மகளிர் அணி முதலிடத்தில் உள்ளது. அஸெர்பைஜான் அணி 2ம் இடத்திலும், ரோமானியா அணி 3ம் இடத்திலும், போலந்து அணி 4ம் இடத்திலும் உக்ரைன் அணி 5ம் இடத்திலும் உள்ளன.