செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்தியா பி அணி மற்றும் இந்தியா மகளிர் ஏ அணிகள் வெண்கலம் வென்று அசத்தல்
செஸ் ஒலிம்பியாட் இறுதிச்சுற்றில் ஓபன் பிரிவில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா பி அணி வெண்கலம் வென்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. கடைசி சுற்றான 11வது சுற்று இன்று நடந்துவருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவடையும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிறைவு விழா நடக்கிறது.
ஓபன் பிரிவில் இந்தியா பி அணியும், மகளிர் பிரிவில் ஏ அணியும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், ஓபன் பிரிவில் இந்தியா பி அணி வெண்கலம் வென்றுள்ளது.
இந்தியா பி அணி இறுதிச்சுற்றில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. ஓபன் பிரிவில் இந்தியா பி அணியில் இடம்பெற்றிருந்த ரோனக் சத்வானி மற்றும் நிஹல் சரின் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகிய இருவரும் போட்டியை டிரா செய்தனர். இதையடுத்து இந்தியா பி அணி இறுதிச்சுற்றில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது.
ஓபன் பிரிவில் 18 புள்ளிகளை பெற்று இந்தியா பி அணி வெண்கலம் வென்றுள்ளது. ஓபன் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. அர்மேனியா அணி வெள்ளி வென்றுள்ளது.
-
மகளிர் பிரிவில் இந்தியா மகளிர் ஏ அணியும் வெண்கலம் வென்றது. 10வது சுற்று முடிவில் முதலிடத்தில் இருந்த இந்தியா மகளிர் ஏ அணி, இறுதிச்சுற்றில் அமெரிக்காவிடம் தோற்றது. அதனால் இந்தியா மகளிர் ஏ அணியும் வெண்கலம் வென்றுள்ளது.