அடுத்தடுத்து விக்கெட்டுகள்.. தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடும் புவனேஷ்வர் குமார்!!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் அசத்தினார்.
இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தொடர்களையும் வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸிஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர் மற்றும் மார்க்ராம் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே எல்கரை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், அதற்கடுத்து 5 ரன்களில் மார்க்ரமையும் 3 ரன்களில் ஹாசிம் ஆம்லாவையும் வெளியேற்றினார். 13 ரன்களுக்கே முதல் மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க அணி இழந்தது.
எனினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளெஸிஸ் ஜோடி நிதானமாக ஆடிவருகிறது. 15 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸும் டுபிளெஸிசும் களத்தில் உள்ளனர்.