BCCI should give recognition to blind cricket team - Sachin Tendulkar

இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்துக்கு (சிஏபிஐ) அங்கீகாரம் அளிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இதுவரை 4 உலகக் கோப்பையை (டி20, 40 ஓவர்) வென்று சாதனை படைத்துள்ளது.

இதை நாம் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நான் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்துக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்ய வேண்டும்.

பல்வேறு தடைகளைத் தாண்டி நமது நாட்டுக்கு பார்வையற்றோர் கிரிக்கெட் வீரர்கள் பெருமை சேர்த்து வருகின்றனர். மற்ற அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் அவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு பிசிசிஐ அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது. அதேபோல், இந்த முறையும் ஆதரவளிக்க முன்வர வேண்டும்.

பிசிசிஐயின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பார்வையற்ற வீரர்களையும் கொண்டு வர வேண்டும். அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்க இது உதவும்.

மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும்" என்று அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.