பிசிசிஐ வருடாந்திர விருதுகளை இன்று வழங்கியுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பிசிசிஐ விருதுகள்
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் மற்றும் கிரிக்கெட்டில் சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருதுகளை இன்று வழங்கியது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விருது பெறவர்களின் முக்கியமானவர்கள்.
கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இன்னும் தன்வசம் வைத்திருக்கும் டெண்டுல்கர், இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு செய்த சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சச்சின் சாதனைகள் தொடர்ந்து பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
ஜஸ்பிரித் பும்ரா
உலகின் நம்பர் 1 பவுலரான ஜஸ்பிரித் பும்ரா, 2023-24ல் செய்த அசாதாரண மூன்றாவது முறையாக சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான (ஆண்கள்) பாலி உம்ரிகர் விருதைப் பெற்றார். 2024ம் ஆண்டு இந்தியாவின் வெற்றியில், குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். பும்ரா விக்கெட் வேட்டை நடத்தி டி20 உலக்கோப்பையை இந்தியா கைப்பற்ற காரணமாக விளங்கினார். டெஸ்டுகளிலும் 2024ல் 71 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். இது அவரது மூன்றாவது பாலி உம்ரிகர் விருது வெற்றியாகும். விராட் கோலி மட்டுமே அதிக முறை இந்த விருதை வென்றுள்ளார்.
ஸ்மிருதி மந்தனா
பெண்கள் பிரிவில், ஸ்மிருதி மந்தனா மூன்றாவது முறையாக சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (பெண்கள்) விருதைப் பெற்றார். 2020-21 மற்றும் 2021-22 சீசன்களில் ஏற்கனவே அவர் விருது வென்றிருந்த நிலையில், இப்போது 3வது முறையாக விருது வென்றுள்ளார். 2024ம் ஆண்டு ஸ்மிருதி மந்தனா 57.46 சராசரியில் 747 ரன்கள் குவித்தார், இதில் நான்கு சதங்கள் அடங்கும். சர்வதேச அரங்கில் அவரது குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையும் செயல்படும் திறனும் அவருக்கு மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்று கொடுத்துள்ளது.
அஸ்வினுக்கும் விருது
அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்பை பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான் மற்றும் ஆஷா சோபனா ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறந்த சர்வதேச அறிமுக விருதுகளை வென்றனர். மேலும் ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் விக்கெட் எடுத்தவருக்கான மாதவ்ராவ் சிந்தியா விருது, உள்நாட்டு வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது என மொத்தம் 26 விருதுகள் வழங்கப்பட்டன.
பிசிசிஐ வழங்கிய அனைத்து விருதுகளின் பட்டியல் இதோ:
கர்னல் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆண்கள்: சச்சின் டெண்டுல்கர்
பாலி உம்ரிகர் விருது - சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் - ஆண்கள்: ஜஸ்பிரித் பும்ரா
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் - பெண்கள்: ஸ்மிருதி மந்தனா
சிறந்த சர்வதேச அறிமுகம் - ஆண்கள்: சர்ஃபராஸ் கான்
சிறந்த சர்வதேச அறிமுகம் - பெண்கள்: ஆஷா சோபனா
பிசிசிஐ சிறப்பு விருது: ரவிச்சந்திரன் அஸ்வின்
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் - பெண்கள்: ஸ்மிருதி மந்தனா
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் - பெண்கள்: தீப்தி சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த நடுவர்: அக்ஷய் டோட்ரே
