இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.

வங்கதேசத்தின் மிர்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மகமதுல்லா 75 ரன்கள் குவித்தார். கேப்டன் மோர்ட்டஸா 29 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி, வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 57 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா 4 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமது 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
மோர்ட்டஸா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
