ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஃபைனலில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை வீழ்த்தி 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் அபாரமாக விளையாடிய ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால் ஃபைனலுக்கு முன்னேறினார். ஃபைனலில் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டு ஆடினார். 

நடால் - டேனியல் இடையே கடும் போட்டி நிலவியது. மெல்போர்னில் நடந்த இந்த போட்டி 5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்தது. முதல் 2 செட்களை 2-6, 6-7(5) என இழந்த நடால், அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 7-5 என வென்று பட்டத்தை வென்றார்.

இது ரஃபேல் நடால் வென்ற 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிகமான பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் நடால்.

அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றதுதான், ஓபன் டென்னிஸில் ஒரு தனிநபர் வென்ற அதிக பட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே 2009 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற ரஃபேல் நடால், 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பட்டம் வென்றார். 

இதற்கு முன் ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடெரர், நோவாக் ஜோகோவிச் ஆகிய மூவருமே தலா 20 ஆடவர் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தனர். இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் விளையாடாத நிலையில், இம்முறை பட்டம் வென்று, ஜோகோவிச், ஃபெடரர் ஆகிய இருவரையும் விர ஒரு கிராண்ட்ஸ்லாமை அதிகம் வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் ரஃபேல் நடால்.