ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்தும் ஸ்பின்னர்கள்!! 6 விக்கெட்டுகளை இழந்து திணறும் ஆஸி., அணி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணியோ 200 ரன்களுக்கு உள்ளாகவே 6 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணியோ 200 ரன்களுக்கு உள்ளாகவே 6 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாரா, ரிஷப் பண்ட்டின் சதங்கள் மற்றும் மயன்க், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான அரைசதங்கள் ஆகியவற்றால் 622 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தது. மூன்றாம் நாள் ஆட்டமான இன்று, தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை 27 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப். அபாரமாக ஆடிய மார்கஸ் ஹாரிஸ் 79 ரன்களை குவித்தார். சிறப்பாக ஆடிய அவரை ஜடேஜா அவுட்டாக்கினார். அதனால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் ஹாரிஸ்.
ஷான் மார்ஷ் 8 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி வெளியேறினார். கடந்த போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை இழந்தது.
லாபஸ்சாக்னேவின் விக்கெட்டை மட்டும் ஷமி வீழ்த்தினார். பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஆகிய இருவரையும் குல்தீப் பெவிலியனுக்கு அனுப்பினார். மூன்றாம் நாளான இன்று, டீ பிரேக்கிற்கு பிறகு களத்திற்கு வந்த முதல் ஓவரிலேயே டிம் பெய்னை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் குல்தீப்.
ஆஸ்திரேலிய அணி 198 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. இந்திய அணி இந்த போட்டியிலும் வெல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.