மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா...
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்கள் அடித்தது.
அடுத்து ஆடிய இந்தியா 49.2 ஓவர்களில் 227 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்ற இந்தியா, முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த ஆஸ்திரேலியாவில் தொடக்க வீராங்கனை நிகோல் போல்டன் அதிகபட்சமாக 12 பவுண்டரிகள் உள்பட 84 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்தபடியாக பெத் மூனி 56 ஓட்டங்கள், கேப்டன் மெக் லேனிங் 24 ஓட்டங்கள், அலிசா ஹீலி 19 ஓட்டங்கள், நிகோலா கேரி 16 ஓட்டங்கள் சேர்த்தனர்.
ஜெஸ் ஜோனசன், ஆஷ்லே கார்டனர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, அமன்டா வெலிங்டன், ரேச்சல் ஹேய்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகினர். எலிஸ் பெர்ரி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 70 ஓட்டங்களுடனும், மீகன் ஷட் ஓட்டங்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் ஷிக்ஷா பாண்டே 3, பூனம் யாதவ் 2, எக்தா பிஷ்த், ஹர்மன்பிரீத் கெளர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மட்டும் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 67 ஓட்டங்கள் எடுத்தார். பூஜா வஸ்த்ரகர் 30 ஓட்டங்கள், பூனம் ராவத் 27 ஓட்டங்கள், தீப்தி சர்மா 26 ஓட்டங்கள் எடுக்க, ஹர்மன்பிரீத் கெளர் 17 ஓட்டங்கள், கேப்டன் மிதாலி ராஜ் 15 ஓட்டங்கள், ஷிக்ஷா பாண்டே 15 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினர். வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, பூனம் யாதவ் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஜோனசன் 3, எலிஸ், வெலிங்டன் தலா 2, மீகன், கார்டனர், கேரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவின் நிகோல் போல்டன் ஆட்டநாயகியானார்.