as opener and middle order batsman Rahane doing well Kohli

ரஹானேவால் தொடக்க வீரராக மட்டுமின்றி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்கி இரட்டைப் பங்களிப்பு வழங்க முடிகிறது என்று இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

வெற்றிக்கு பிறகு கோலி பேசியது:

“ரஹானே, சில காலமாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். முன்வரிசையில் களமிறங்கி பெரிய அளவில் ஓட்டங்களை குவிக்கக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. அவர் எப்போதுமே எங்கள் அணியின் மாற்று தொடக்க வீரராக திகழ்கிறார்.

இந்தத் தொடரின் இரு ஆட்டங்களிலுமே ரஹானே சிறப்பாக பேட் செய்தார். தலைசிறந்த டெஸ்ட் பந்தய வீரரான ரஹானே, இப்போது ஒரு நாள் போட்டியிலும் முத்திரை பதித்து வருகிறார். அவர் நெருக்கடியை எளிதாக கையாள்வதோடு, ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறார்.

மிடில் ஆர்டரிலும் மிகப்பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்கக் கூடியவராக இருக்கிறார் ரஹானே. அதனால் 2019 உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளில் இந்திய அணி கூடுதல் பெளலருடன் களமிறங்கும் வாய்ப்பு ஏற்படும்.

கிரிக்கெட்டில் இரட்டை பங்களிப்பு செய்யக்கூடியவர்கள் மிகவும் அரிதுதான். ரஹானேவால் தொடக்க வீரராக மட்டுமின்றி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்க முடிகிறது,

மேலும், குல்தீப் யாதவின் பந்துவீச்சு இரு புறமும் சுழலக் கூடியதாகும். அவருடைய பந்துவீச்சை நான் ஐபிஎல் போட்டியின்போது எதிர்கொண்டுள்ளேன். இந்த ஆட்டத்தில் அவர் பந்துவீசிய விதத்திற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்” என்றுக் கூறினார்.