மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், வீராங்கனை சவிதா ஆகியோருக்கு அர்ஜுனா விருது... பரிந்துரைத்தது ஹாக்கி இந்தியா...
இந்திய ஹாக்கி வீரர்களான மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சவிதா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க ஹாக்கி இந்தியா அமைப்பு பரிந்துரைத்து உள்ளது.
இந்திய ஹாக்கி வீரர்களான மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சவிதா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க ஹாக்கி இந்தியா அமைப்பு பரிந்துரைத்து உள்ளது.
மேலும் ,முன்னாளர் வீராங்கனை சங்காய் இபெம்ஹால் சானு, முன்னாள் கேப்டன் பரத் சேத்ரி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் பி.எஸ்.செளஹான் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் மன்பிரீத் சிங், அணிக்கு தலைமை தாங்கி ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றியது. சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் அவர் தலைமையிலேயே இந்தியா களம் கண்டது.
தரம்வீரைப் பொருத்த வரையில் அனுபவம் வாய்ந்த நடுகள வீரர் ஆவார். 2014-இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்த அவர், லண்டன் ஒலிம்பிக்ஸ், 2014 உலகக் கோப்பை போட்டியின் அணியிலும் அங்கம் வகித்திருந்தார்.
மகளிர் ஹாக்கி அணி கோல்கீப்பரான சவிதா, கடந்த ஆண்டு இந்தியா ஆசியக் கோப்பை வெல்வதில் முக்கியப் பங்காற்றியவர். இறுதிச்சுற்றில் சீனாவுடனான மோதலில் ஷூட் அவுட் முறையின்போது, அந்த அணியின் கோல் முயர்சிகளை அரண்போல் தடுத்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.
முன்னாள் வீராங்கனையான சங்காய் இபெம்ஹால் சானு, 2002 காமன்வெல்த்தில் தங்கமும், 2006-ஆம் ஆண்டில் வெள்ளியும் வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். முன்னாள் கேப்டன் பரத் சேத்ரி தலைமையில் 2012-இல் இந்தியா லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ளார்.
இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா செயலர் முகமது முஷ்டாக் அகமது, "விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளவர்கள் பல்வேறு போட்டிகளில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளனர். பெருமைக்குரிய சாதனைகளுக்காக அவர்களுக்கு விருது வழங்க ஹாக்கி இந்தியா பரிந்துரைத்துள்ளது" என்றார்.