தவறான தகவல்களை அளித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் அனுராக் தாக்குர்…
பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததற்காக முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
பிசிசிஐயை மறுசீரமைக்கும் வகையில் லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து இடையூறாக இருந்தார்.
இதனிடையே பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி பிரதிநிதியை நியமிப்பது, லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது போன்றவை பிசிசிஐயின் தன்னாட்சியைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு ஐசிசியிடம் அனுராக் தாக்குர் கேட்டதாக லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அனுராக் தாக்குர், அதுபோன்ற கடிதம் எதையும் ஐசிசியிடம் கேட்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், அனுராக் தாக்குர் ஐசிசியிடம் கடிதம் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் கடும் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குரை தகுதி நீக்கம் செய்ததோடு, நீதிமன்றத்துக்கு தவறான தகவலை அளித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.
இது தொடர்பான வழக்கை கடந்த 7-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்போது அனுராக் தாக்குர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தை ஏற்க மறுத்ததோடு, ஒரு பக்க அளவிலான பிரமாணப் பத்திரத்தில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணை ஜூலை 14-ஆம் தேதி (இன்று) நடைபெறும்போது அனுராக் தாக்குர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அனுராக் தாக்குர் கூறியிருப்பது:
“உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் நோக்கம் எதுவும் எனக்கு கிடையாது. எவ்வித நோக்கமும் இன்றி தவறான தகவல்களை அளித்ததற்காக எவ்வித தயக்கமும் இன்றி இந்த நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்