2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 510 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, ஜிம்பாப்வே அணி 47 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.  

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை 510 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலியும் இம்ரான் பட்டும் இறங்கினர். இம்ரான் பட் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அபித் அலியுடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.

அபித் அலி - அசார் அலி இணைந்து மிகச்சிறப்பாக ஆடி இருவருமே சதமடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 246 ரன்களை குவித்து கொடுத்தனர். அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், ஃபவாத் ஆலம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி சதமடித்த தொடக்க வீரர் அபித் அலி, அபித் அலி 118 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

2ம் நாள் ஆட்டத்தை அபித் அலியும் சஜித் கானும் தொடர்ந்தனர். சஜித் கான் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும் ஹசன் அலி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். அதனால் 341 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில், தொடர்ந்து அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டை சதமடித்தார். அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடிய நௌமன் அலி 97 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அத்துடன் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 510 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் களமிறங்கியது முதலே சீரான இடைவெளியில் ஒற்றை இலக்கத்திற்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் முசாகண்டா ரன்னே அடிக்காமலும், கெவின் கசுசா 4 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் பிரண்டன் டெய்லர் 9 ரன்னிலும் ஷும்பா 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 47 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய மூன்றாம் வரிசை வீரர் ரெஜிஸ் சகாப்வா 28 ரன்கள் அடித்து 2ம் நாள் ஆட்ட முடிவில் களத்தில் உள்ளார். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது.