ஒவ்வொரு பந்திலும் இங்கிலாந்துக்கு விக்கெட் பயத்தை காட்டுறாப்ள..! இந்திய பவுலருக்கு ஜாகீர் கான் புகழாரம்
முகமது சிராஜ் வீசும் ஒவ்வொரு பந்தும் விக்கெட் வீழ்த்துவதை போல உள்ளது என்று முன்னாள் ஜாம்பவான் ஃபாஸ்ட் பவுலர் ஜாகீர் கான் கருத்து கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி முன்னெப்போதையும் விட சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் ஆடுவதுதான் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் அந்த அணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றி பெறுவதற்கான காரணம்.
பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய அனுபவ பவுலர்களுடன் இளம் முகமது சிராஜும் இணைந்து மிரட்டுகிறார். பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகிய சீனியர் பவுலர்களை விட சிராஜின் பவுலிங்கில் தான் ஒவ்வொரு பந்துமே விக்கெட்டை எதிர்பார்க்கும் வகையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகளுடன் மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
சிராஜ் வீசும் ஒவ்வொரு பந்துமே விக்கெட் எடுப்பதை போலவே உள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஓய்வெடுக்கவே விடாமல் தொடர்ச்சியாக சிறப்பாக வீசுகிறார் என்று சிராஜை கவாஸ்கர் புகழ்ந்திருந்த நிலையில், அதே ஸ்டேட்மெண்ட்டை ஜாகீர் கானும் கூறியுள்ளார்.
சிராஜ் குறித்து பேசியுள்ள ஜாகீர் கான், சிராஜ் பவுலிங் வீசிய விதம் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு பந்திலுமே விக்கெட் விழப்போகிறது என்ற எண்ணத்தை கொடுக்கிறது அவரது பவுலிங் என்று ஜாகீர் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.