ரஞ்சி டிராபி ஃபைனலில் மத்திய பிரதேச அணி அபாரமாக பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்களை குவித்துள்ள நிலையில், 4ம் நாள் ஆட்டத்தின் 3வது செசன் மழையால் தடைபட்டுள்ளது. 

உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் ஃபைனலில் மத்திய பிரதேசம் மற்றும் மும்பை அணிகள் ஆடிவருகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்களை குவித்தது. மும்பை அணியில் சர்ஃபராஸ் கான் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். சர்ஃபராஸ் கான் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 78 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் மத்திய பிரதேச அணி வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். போட்டி டிராவாகும் பட்சத்தில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.

அந்தவகையில், முதல் இன்னிங்ஸ் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து மத்திய பிரதேச அணி அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது. மத்திய பிரதேச அணியின் தொடக்க வீரர் ஹிமான்ஷு மண்ட்ரி 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான யஷ் துபே மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஷுபம் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை அணி திணறியது.

யஷ் துபே - ஷுபம் ஷர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தது. ஷுபம் ஷர்மா 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். யஷ் துபேவும் சதமடிக்க, அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதாரும் அபாரமாக பேட்டிங் ஆடினார். 

யஷ் துபே 133 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னரு பொறுப்பான பேட்டிங்கை தொடர்ந்த ரஜத் பட்டிதாரும் சதமடித்தார். பட்டிதார் 122 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் சரன்ஸ் ஜெய்ன் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து, 51 ரன்களுடன் களத்தில் நிற்கும் நிலையில், 9 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்களை மத்திய பிரதேச அணி குவித்திருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டத்தின் 3வது செசனில் மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்த போட்டியில் மத்திய பிரதேச அணி மெகா ஸ்கோரை அடித்திருப்பதால் அந்த அணி கோப்பையை வெல்வது உறுதி.