இது என்னடா புது புரளியா இருக்கு..? தன்னை பற்றி பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்த வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, தான் ஆர்வம் காட்டுவதாக பரவிய தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலருமான வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவருகின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலருமான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், அந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் வாசிம் அக்ரம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் வாசிம் அக்ரம், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.
அந்த டுவீட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி என்பது நிபுணத்துவம் வாய்ந்த பதவி. அதற்கு நான் ஆசைப்பட்டதே இல்லை. நான் என் வாழ்வில் இப்போதிருக்கும் நிலையிலேயே திருப்தியாக உள்ளேன். அதற்கு கடவுளுக்கு நன்றி என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.