பவுலிங் தரத்தில் ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் சிறந்த டி20 லீக் தொடர் என்று பாக்., ஃபாஸ்ட் பவுலர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல, ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், தென்னாப்பிரிக்காவில் மஸான்ஸி சூப்பர் லீக் என பல லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவற்றில், உலகின் பணக்கார மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிசிசிஐயால் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தான் மிகப்பெரிய தொடர். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஐபிஎல்லில் ஆடத்தான் சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணம், கோடிக்கணக்கில் வழங்கப்படும் ஊதியம். 

கிரிக்கெட்டின் தரம், பணப்புழக்கம், விளம்பரம், பிரபலம் என அனைத்துவகையிலும் ஐபிஎல் தான் பிரபலமான தொடர். ஆனால் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் சிறந்தது என்று வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் யூடியூபில் பேசிய வஹாப் ரியாஸ், ஐபிஎல்லில் சர்வதேச கிரிக்கெட்டின் டாப் வீரர்கள் அனைவரும் ஆடுகின்றனர். எனவே ஐபிஎல்லுடன் பி.எஸ்.எல்(பாகிஸ்தான் சூப்பர் லீக்)ஐ ஒப்பிட முடியாது. ஐபிஎல்லின் லெவலே வேறு. ஐபிஎல் நடத்தப்படும் விதம், வீரர்களுக்கான ஏலம் என அனைத்துமே வேற லெவல். பி.எஸ்.எல் மட்டுமல்ல உலகின் வேறு எந்த டி20 லீக்கையும் ஐபிஎல்லுடன் ஒப்பிடமுடியாது. ஆனால் ஐபிஎல்லுக்கு அடுத்த தரத்தில் இருக்கும் லீக் தொடர் என்றால் அது கண்டிப்பாக பி.எஸ்.எல் தான்.

பி.எஸ்.எல்லின் பவுலிங் தரம் உயர்ந்தது. பி.எஸ்.எல்லில் ஆடும் அளவிற்கான மிகச்சிறந்த பவுலர்களை வேறு எந்த தொடரிலும் பார்க்க முடியாது. ஐபிஎல்லில் கூட பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. அதனால் தான் பி.எஸ்.எல்லில் அதிகமான போட்டிகள், ஹை ஸ்கோரிங் போட்டிகளாக இருப்பதில்லை. பி.எஸ்.எல்லின் பவுலிங் அட்டாக் தான் உலகின் சிறந்த பவுலிங் அட்டாக் என்று வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.