ஐபிஎல்லில் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவரும் இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட்பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு விவிஎஸ் லக்ஷ்மண் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை அசால்ட்டாக செய்கிறார் உம்ரான் மாலிக்.
இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், இந்த சீசனின் அதிவேக பந்தை (157 கிமீ) வீசியுள்ளார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக ரோவ்மன் பவலுக்கு உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசினார். அதுதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 2வது அதிவேக பந்தும் அவர் வீசியதுதான். அதை 155 கிமீ வேகத்தில் வீசினார்.
150 கிமீ வேகத்திற்கு அசால்ட்டாக வீசி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டுவரும் உம்ரான் மாலிக், விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். அதேவேளையில், அவருக்கு சிலர் சில அறிவுரைகளும் வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில், உம்ரான் மாலிக் குறித்து கருத்து கூறிய என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், பெரிய லெவலில் கிரிக்கெட் ஆடும்போது களத்திற்கு வெளியே கட்டுப்பாடு வேண்டும். அறிவுரை கூற நிறைய பேர் இருப்பார்கள். நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிறைய எதிர்பார்ப்புகள் உங்கள் மீது இருக்கும். ஆனால் உயர்ந்த மட்டத்தில் விளையாடும் வீரர்கள் மிக விரைவில் அவற்றை எதிர்கொள்ள கற்றுக்கொண்டு, அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை கற்றுக்கொண்டு அதை செய்வார்கள். உம்ரான் மாலிக்கும் அதை செய்வார் என்று நம்புவதாக லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
