தம்பிங்களா ஒழுக்கம் தவறிட்டீங்களேப்பா.. இந்திய அணியின் செயல்பாட்டை விமர்சித்த முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் போதிய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள தவறிவிட்டதாக முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் விமர்சித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் தொடரில் ஆடிய இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுமோசமாக தோற்று ஒயிட்வாஷ் ஆனது. முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெறும் இரண்டரை நாளில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியை 2-0 என ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை. இந்திய அணி மறக்க வேண்டிய சுற்றுப்பயணங்களில் இதுவும் ஒன்று.
இந்திய அணி சரியாக ஆடாதது மட்டுமல்லாமல், கடைசி டெஸ்ட் போட்டியில் ஒழுக்கமாக நடந்துகொள்ளவில்லை என லட்சுமணன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள விவிஎஸ் லட்சுமணன், இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்திய அணி சில நேரங்களில் ஒழுக்கம் தவறியது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்று லட்சுமணன் டுவீட் செய்துள்ளார்.
வில்லியம்சன், டாம் லேதமின் விக்கெட்டை விராட் கோலி கொண்டாடிய விதம், டாம் லேதமின் விக்கெட் விழுந்த பிறகு, ரசிகர்களை நோக்கி ஏதோ காரணத்திற்காக தகாத வார்த்தைகளில் பேசியது, நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் லேதமும் பிளண்டெலும் ரன் ஓடும்போது, அவர்களது கவனத்தை சிதறடிக்கும் வகையில் இந்திய வீரர் கத்தியது ஆகிய சம்பவங்களை கருத்தில் கொண்டு லட்சுமணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.