ஆர்சிபி அணியில் செய்ய வேண்டிய ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் வீரேந்திர சேவாக். 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனை ஆர்சிபி அணி சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி நேற்று தோற்றது. அந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி தோல்வியடைந்தது. இந்நிலையில், ஆர்சிபி அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் சேவாக்.

இந்த சீசனில் விராட் கோலி - தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கிவருகின்றனர். 3ம் வரிசையில் ரஜாத் பட்டிதரும், 4ம் வரிசையில் மேக்ஸ்வெல்லும், அவரைத்தொடர்ந்து டிவில்லியர்ஸும் இறங்குகின்றனர். ரஜாத் பட்டிதர் இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 71 ரன்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில், அவரை நீக்கிவிட்டு, முகமது அசாருதீனை அணியில் சேர்த்து, அவரை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, கோலி 3ம் வரிசையில் இறங்கலாம் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சேவாக், விராட் கோலி அவரது வழக்கமான பேட்டிங் ஆர்டரான 3ம் வரிசையிலேயே ஆடவேண்டும். முகமது அசாருதீனை அணியில் எடுத்து அவரை ஓபனிங்கில் இறக்கிவிட்டு, கோலி 3ம் வரிசையில் ஆடலாம். அப்படி ஆடினால், 3, 4, 5 ஆகிய வரிசைகளில் முறையே கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆடுவாரக்ள். அது ஆர்சிபியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும். தேவ்தத் படிக்கல்லும் அசாருதீனும் சரியாக ஆடாவிட்டால் கூட, மிடில் ஆர்டரில் 3 உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லுக்கு முன் நடந்து முடிந்த உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் 37 பந்தில் சதமடித்து, 2வது அதிவேக சதமடித்த முகமது அசாருதீன், மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவரை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த ஆர்சிபி அணி, ஆடும் லெவனில் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை.