இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியை, 2ம் தர இந்திய அணி என்ற அர்ஜூனா ரணதுங்காவின் விமர்சனத்துக்கு வீரேந்திர சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளதால், இலங்கை தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆடுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றுதான் முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 262 ரன்கள் அடிக்க, 263 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 

இதற்கிடையே, இலங்கை தொடரில் ஆடும் இந்திய அணியை 2ம் தர அணி என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார். இந்தியா 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு அசிங்கம் என்று ரணதுங்கா கருத்து கூறியிருந்தார்.

ரணதுங்காவின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தக்க பதிலடி கொடுத்திருந்தது. இலங்கை முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா, இந்திய முன்னாள் வீரர்கள் என யாருமே ரணதுங்காவின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; அவரது கருத்துடன் உடன்படவும் இல்லை.

இந்நிலையில், ரணதுங்காவின் கருத்து குறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், ரணதுங்கா மரியாதை தெரியாமல் பேசியிருக்கிறார். அவர் வேண்டுமானால் பி டீம் என்றூ நினைக்கலாம். ஆனால் எந்த அணியை வேண்டுமானாலும் அனுப்புமளவிற்கு வலுவாக உள்ளது இந்திய கிரிக்கெட். அதற்காக அது பி டீம் ஆகிவிடாது. இதற்கான கிரெடிட் எல்லாம் ஐபிஎல்லுக்குத்தான். இந்தியாவில் நிறைய திறமைசாலிகள் உள்ளனர்.

ரணதுங்கா பி டீம் என்கிறார். அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பி டீம் என்று சொல்லும் இந்திய அணி, இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியை கூட வீழ்த்தும். இது பி டீம் என்று இல்லை. ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த அணியை அனுப்பியிருப்பதற்காகவே நன்றி தெரிவிக்க வேண்டும். எங்கள் அணி இங்கிலாந்துக்கு சென்றுவிட்டது என்று பிசிசிஐ இலங்கை சுற்றுப்பயணத்தையே ரத்து செய்திருக்கக்கூடும். ஆனால் பிசிசிஐ அதை செய்யவில்லை. அதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் நன்றிதான் தெரிவிக்க வேண்டும் என்று சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.