ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய கோலியின் மிரட்டலான கேட்ச்..! வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அபாரமான கேட்ச்சை பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அந்த மிரட்டலான கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தவான்(67), ரிஷப் பண்ட்(78) மற்றும் ஹர்திக் பாண்டியாவின்(64) அதிரடி அரைசதங்களால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது.
330 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 200 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம் கரனும் அடில் ரஷீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி கொஞ்சம் அசால்ட்டாக விட்டுவிட்டதால், அது வளர்ந்து இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
8வது விக்கெட்டுக்கு 9 ஓவரில் 57 ரன்களை சேர்த்தனர். சாம் கரன் - அடில் ரஷீத் ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு அதற்கான வாய்ப்பை ஷர்துல் தாகூர் ஏற்படுத்தி கொடுக்க, அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார் கேப்டன் கோலி.
ஷர்துல் தாகூர் வீசிய 40வது ஓவரின் 2வது பந்தை அடில் ரஷீத் கவர் திசையில் அடிக்க, ஷார்ட் கவர் திசையில் நின்ற கோலி, டைவ் அடித்து அபாரமாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
அதன்பின்னர் சாம் கரன் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று தனி நபராக போராடினாலும், விக்கெட்டுகள் கையில் இல்லாததால் கடைசியில் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.