இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் அடித்த விராட் கோலி எட்டிய புதிய மைல்கற்களை பார்ப்போம். 

சமகால கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, தலைசிறந்த வீரராக திகழ்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை படைப்பதையும், புதிய மைல்கல்லை எட்டுவதையும் வழக்கமாக கொண்டிருக்கும் விராட் கோலி, ஏதாவது ஒரு போட்டியில் எந்த மைல்கல்லையும் எட்டவில்லை என்றால் தான் அதிசயம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஒன்றரை ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்காத விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அரைசதத்தை கடந்ததும், ரசிகர்கள் அனைவருமே அவர் இன்று சதமடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 66 ரன்னில் அடில் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்துவிட்டார்.

இந்த போட்டியில் அடித்த ரன்களின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 3ம் வரிசை வீரராக 10,000 ரன்களை கடந்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன்பாக ரிக்கி பாண்டிங் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 3ம் வரிசையில் ஆடி மட்டுமே 10,000 ரன்களை குவித்த ஒரே வீரர். ரிக்கி பாண்டிங், 330 இன்னிங்ஸ்களில் 12,662 ரன்களை குவித்துள்ள நிலையில், கோலி வெறும் 190 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி 5ம் இடத்தை பிடித்துவிட்டார் கோலி. இந்த பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவரும் உள்ளனர்.