Asianet News TamilAsianet News Tamil

சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

சேஸிங்கில் தான் ஒரு மாஸ்டர் என்பதையும், தன்னை ஏன் கிங் கோலி என்றழைக்கிறார்கள் என்பதையும், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் மிகக்கடினமான சூழலில் இலக்கை விரட்டி நிரூபித்து காட்டினார்.
 

virat kohli proves once again he is a king of chasing by an amazing innings against pakistan in t20 world cup
Author
First Published Oct 23, 2022, 6:05 PM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்து சாதனை நாயகனாக திகழ்ந்துவருகிறார். 71 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, அதில் பெரும்பாலான சதங்களை சேஸிங்கில் தான் அடித்துள்ளார்.

முதலில் பேட்டிங் ஆடுவதை விட, ஒரு குறிப்பிட்ட இலக்கை விரட்டும்போது கோலி இன்னிங்ஸை மிகச்சிறப்பாக திட்டமிட்டு அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றிகரமாக இலக்கை எட்டி, இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதில் வல்லவர் கோலி. அதை பலமுறை செய்து காட்டியிருக்கிறார் கோலி. சேஸிங்கில் தான் ஒரு கிங் என்பதை பலமுறை நிரூபித்துள்ள கோலி, டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது. 160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மா (4), கேஎல் ராகுல்(4), சூர்யகுமார் யாதவ்(15), அக்ஸர் படேல்(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6.1 ஓவரில் 31 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில் கோலியும் பாண்டியாவும் இணைந்து நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். களத்தில் நிலைத்தபின்னர் கோலி அடித்து ஆட, ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களின் மிரட்டல் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். ஹர்திக் பாண்டியாவிற்கு பெரிய ஷாட் கனெக்ட் ஆகாதபோதிலும், கோலி முழு பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்து சிறப்பாக ஆடினார்.

கடைசி 5 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட, 16 மற்றும் 17வது ஓவர்களை வீசிய ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் தலா 6 ரன்களை மட்டுமே வழங்க, இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமானது. 18வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரின் முதல் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்ற கோலி, கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

6.1 ஓவரில் 31 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற இக்கட்டான சூழலிலிருந்து இந்திய அணியை மீட்டெடுத்து 53 பந்தில் 82 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, மீண்டும் ஒரு முறை சேஸிங்கில் கிங் என்று நிரூபித்தார்.

ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா ஆகிய பாகிஸ்தானின் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை எதிர்கொள்ள மற்ற வீரர்கள் திணற, விராட் கோலி அவர்களின் அதிவேக பவுலிங்கை பட்டாசாக வெடித்து ஒருநாளைக்கு முன்பாகவே மெல்பர்னில் தீபாவளியை கொண்டாடினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios