- Home
- Sports
- Sports Cricket
- Shashank Singh: என்ன சமைக்கிற நீ.. சமையல்காரரை கொடூரமாக தாக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்! பாய்ந்தது வழக்கு!
Shashank Singh: என்ன சமைக்கிற நீ.. சமையல்காரரை கொடூரமாக தாக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்! பாய்ந்தது வழக்கு!
Shashank Singh: சரியாக சமைக்கவில்லை எனக்கூறி தன் வீட்டு சமையல்காரரை அடித்து உதைத்த பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஷஷாங்க் சிங் மீது வழக்குப்பதிவு
IPL போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தையும், ஓய்வுபெற்ற IPS அதிகாரியுமான சைலேஷ் சிங் மீது போபால் போலீஸ் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. தங்கள் வீட்டு சமையல்காரரை தாக்கியதாகவும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், அவர்களது குடும்ப கார் டிரைவர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ராத்திபாட் போலீசார் அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போபால், மெண்டோரி கிராமத்தில் உள்ள ஷஷாங்க் சிங்கின் வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த விபேந்திர சிங் தோமர் (31) என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் நேற்று ராத்திபாட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமையல்காரர் கொடுத்த அதிரடி புகார்
புகாரில் விபேந்திர சிங் ஒரு நண்பர் மூலமாக ரேவாவிலிருந்து போபாலுக்கு வேலைக்கு வந்தேன். மாதம் ₹15,000 சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு இலவசம் என்று கூறினார்கள். அதோடு, எதிர்காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், வேலைக்கு சேர்ந்த சில மணி நேரங்களிலேயே கடுமையான மன உளைச்சலையும், திட்டுக்களையும் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். சமைத்த உணவு சரியில்லை என்று கூறி பிரச்சனை பெரிதாகியுள்ளது.
"அங்குள்ள மோசமான சூழலைப் பார்த்துவிட்டு, வேலையை விட்டு ஊருக்குத் திரும்பப் போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் கோபமடைந்தனர்," என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், யாரிடமும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காக தனது மொபைல் போனை அவர்கள் பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும், விருப்பம் இல்லாமலேயே வேலையைத் தொடரச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அறைக்குள் பூட்டி கொடூரமாக தாக்கினார்கள்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அவர் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டுள்ளார். ஆனால், தந்தை-மகன் இருவரும் தங்கள் டிரைவருடன் சேர்ந்து கதவைத் திறந்து, தன்னை கொடூரமாகத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய மருத்துவப் பரிசோதனையில், விபேந்திர சிங்கின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகாரையும், மருத்துவ அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு, ராத்திபாட் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 296(B) (ஆபாசமான செயல்கள் மற்றும் பொது இடத்தில் திட்டுவது), 115(2) (காயப்படுத்துவது/தாக்குதல்) மற்றும் 3(5) (கூட்டுக் குற்றச் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

