Asianet News TamilAsianet News Tamil

டிராபியை ராகுல் டிராவிட்டிடம் கொடுத்த கோலி – டிராபியை கையில வாங்கி சந்தோஷத்தில் பொங்கிய டிராவிட்!

17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை இந்திய அணி வென்ற நிலையில், கையில் வாங்கிய டிராபியோடு ராகுல் டிராவிட் உற்சாகத்தில் கத்திய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Virat Kohli Giving the T20 World Cup Trophy to Indian Head Coach Rahul Dravid who Celebrate with joy rsk
Author
First Published Jun 30, 2024, 8:51 AM IST

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்‌ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்‌ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்கவே, டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.

 

 

அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் மார்கோ யான்சென் இருவரும் விளையாடினர். இதில், பும்ரா கடைசியில் யான்சென் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

அதன் பிறகு கேசவ் மஹராஜ் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார். 

அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. அதன் பிறகு வந்த கஜிஸோ ரபாடா 5ஆவது பந்தில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டி உள்பட இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில் தான் டிராபியை வென்ற பிறகு விராட் கோலி டிராபியை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கொடுத்து அழகு பார்த்தார். அந்த டிராபியை பெற்ற ராகுல் டிராவிட் உற்சாகமாக கத்தினார். மேலும், ராகுல் டிராவிட்டை இந்திய வீரர்கள் தலைக்கு மேலாக தூக்கி போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றும் முதல் டிராபி இது தான். நேற்றுடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் இது மறக்க முடியாத நாளாக அவருக்கு அமைந்துவிட்டது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios