கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய அணியில் தனது ரோல் குறித்து பேசியபோது, அணியின் தலைவனாக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கெத்தாக தெரிவித்துள்ளார். 

2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டு வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, அனைத்துவிதமான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய கோலி, இனிமேல் இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார்.

விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த 2 ஆண்டுகளாக அவரது அல்டிமேட் திறமையின் அளவிற்கு இல்லை. 70-80 ரன்கள் ஸ்கோர் செய்தாலும், அவர் சதமடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனவே கேப்டன்சியிலிருந்து விலகிய கோலி, கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் இனிமேல் பேட்டிங்கில் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இனிமேல் விராட் கோலி இந்திய அணியில் கேப்டனாக இல்லாமல் ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ள நிலையில், அவரது ரோல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இந்திய அணியில் தனது ரோல் குறித்து பேசிய விராட் கோலி, அணியின் தலைவனாக திகழ்வதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கெத்தாக தெரிவித்தார்.

தோனி கேப்டன்சியிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடியபோதும் கூட, அவர் அணியின் லீடர்களில் ஒருவர் தான். எனவே அணியின் லீடராக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டியதில்லை என்றார் கோலி.