ரோஹித், ராகுல் ஏமாற்றம்; கோலி-பண்ட்டின் பொறுப்பான பேட்டிங்கால் பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
டி20 உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முதல் ஓவரிலேயே ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தில் டக் அவுட்டானார். ஷாஹீன் அஃப்ரிடியின் அடுத்த ஓவரில் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமாரும் 11 ரன்னில் வெளியேறினார்.
31 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணிக்கு, கோலியும் ரிஷப் பண்ட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்து கொடுத்தனர். களத்திற்கு வந்தபோது, பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் நிதானம் காத்த ரிஷப் பண்ட், செட்டில் ஆனபின்னர் 2 சிக்ஸர்களை விளாசினார். 30 பந்தில் 39 ரன்கள் அடித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்தார்.
கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடும் முனைப்பில் களத்தில் நின்ற கோலி, 19வது ஓவரில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 13 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் தேவை.