பெரிய திறமைசாலி.. ஆனால் உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பவுலர் இவர் தான்..! உஸ்மான் கவாஜா ஓபன் டாக்
சமகாலத்தின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமி, உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பவுலர் என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி முன்னெப்போதையும் இப்போதுதான் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நடராஜன், ஷர்துல் தாகூர் என அனைத்துவிதமான ஃபாஸ்ட் பவுலர்களையும் கொண்ட நல்ல வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது இந்திய அணி.
முன்னெப்போதையும் விட சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருக்கும் நிலையில், இப்போதைய சூழலில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் என்று முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் புகழ்ந்துவருகின்றனர்.
இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருப்பதால் தான் இந்திய அணி இங்கிலாந்தில் அபாரமாக ஆடி இங்கிலாந்து மண்ணில் அந்த அணி மீது ஆதிக்கம் செலுத்திவருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து பேசிய உஸ்மான் கவாஜா, இப்போதைய சூழலில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட். மிகச்சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர். பும்ரா உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவர். அவர் ஒரு ஜீனியஸ். இஷாந்த் சர்மாவும் சிறந்த பவுலர்; நல்ல லெந்த்தில் வீசக்கூடியவர். அவரது அனுபவம், இங்கிலாந்து கண்டிஷனில் இந்திய அணிக்கு உதவும்.
அடுத்தது முகமது ஷமி. உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பவுலர் என்றால் அது ஷமி தான். பேட்ஸ்மேன் நினைப்பதைவிட வேகமாக வரும் ஷமியின் பந்து. திறமையில் அவர் அருமையான பவுலர். அவர் சீம்-ஐ பயன்படுத்தும் விதம் அபாரமானது என்று ஷமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் உஸ்மான் கவாஜா.